Tuesday 29 April 2014

மாறாது















நிலா முகம்
வட்டம் ஆகலாம்!..
உலா வருகையில்
தேய்ந்து போகலாம்!..

தென்றல் அவிழ்த்த
மொட்டும் கூம்பலாம்!..
மொட்டு உமிழ்ந்த
தேனும் காயலாம்!..

மறையாது - என்றும்
என் கனவுத்திரையில்
உன் நினைவுப்படங்கள்!..

மாறாது - என்றும்
நம் காலத்திரையில்
காதல்ப்பாடல்கள்!..

*இலக்கியன் மு.முர்சித்*  

ஓர் கண்ணீர் துளி




















என்
கல்லறை கனாக்களில்
நம்
காதல் கவிதைகளின்
ராஜாங்கம்!..

உன்
புருவ வாட்களால்
புன்னகை புயல்
தாக்கியபோது !..

நீ
கல்யாணி வாசித்தாய்
முகாரிய வாடை -என்
நினைவுகளில்!.. 

'நீ
என் நிழலாய்'என்றாய்
'நீயாய் நான்' என்றபோது!.. 

நீ-என் 
கல்லறையில் மலர்கள்
வைக்கத்தேவையில்லை!..

ஓர் 
கண்ணீர் துளி போதும்
நம்
காதலாவது வாழட்டும்!..

*இலக்கியன் மு.முர்சித்*  

Monday 28 April 2014

ஆழிப்பேரலையால்












மனிதா!..- உன்
அழ்ந்த உறக்கம் களைந்தது
ஆழிப்பேரலையால்!..

மனிதா!..-நீ; பணத்தில்
அழ்ந்த உலகை கண்டதும்
ஆழிப்பேரலையால்!..

மனிதன் மட்டும் அழியவில்லை
ஆழிப்பேரலையால்!.. 
மனிதமும் கூடவே அழிந்ததுவிட்டது
ஆழிப்பேரலையால்!.. 

வடுக்கள்மாறா.. நினைவுத்திரிகள்..
இன்றும் எரிவது கண்ணீரால்!..

*இலக்கியன் மு.முர்சித்*

காதல் உலகம்














காதல்!
என்று சொல்லிப்பார்
உலகமும் பீனிக்ஸ் 
பறவைதான்!..

காதல் தான் உலகம்!
உலகம் தான் காதல்!
என்றான போது!..

காதல்!
சடத்துவத்தை மீறியது-அது
அத்வைதமானது!..

வாழத் தெரியாதவனாகிறாய்-நீ
காதலிக்க தெரியாத போது!..

உடம்பில் 
உயிர் இல்லாதவன்
''பிணம்'' இல்லை...

உணர்வில்
காதல் இல்லாதவன்
''உயிருள்ள பிணம்'' ஆகின்றான்!..

*இலக்கியன் மு.முர்சித்*

கல்லறை கதை



















என் 
அங்கங்கள் செயலிழந்து
புலன்கள் புலம்பெயர்ந்து
விட்டது...

என் 
இதய ரோஜாவை-ஓர்
சூரியசுனாமி சுட்டெரித்து
விட்டது..

விருந்தோ...
மருந்தாய்!..ஆனது
மருந்தோ... 
விருந்தாய் ஆனபோது

என்
நினைவுகள் பரிதவிக்கும்
கல்லறை கதைக்கு-என்
கண்ணீர் கவிதை எழுதுகினறேன்!..

''என்
வாழ்க்கை சிற்பமானது
உன்
உறவுகளால்!..; உணர்வுகளால்!..'' 

*இலக்கியன் மு.முர்சித்*

Sunday 27 April 2014

காத்திருப்பு..
















ஒரு
வார்த்தைக்காக
தவம் கிடக்கிறது
என் உயிர்!..

ஒரு
நிகழ்வுக்காக
உறைந்து கிடக்கிறது
என் உணர்வுகள்!..

என்
இதயத்தில்-ஓர்
சத்தியாக்கிரக போராட்டம்!..

உன் 
இதயத்தில் குடியேர!...
நம்
உணர்வுகள் இடமார!..

*இலக்கியன் மு.முர்சித்* 

போதும்.

















காதல்! சொல்ல வந்தேன்
என் வார்த்தைகள்
வேலை நிருத்தம் செய்கின்றது!... 

கவிதை! ஒன்று தந்தேன்..
அதில் வரிகள்
கரைகின்றது!..

சூரியன்!
பனி பெய்கிறது!..

சந்திரன்!
அக்கினி வீசுகின்றது!...

காதல் சொல்ல
மொழிகள் தேவையில்லை..
விழிகள் போதும்!...

காற்றை மெல்ல
பற்கள் தேவையில்லை..
சுவாசம் போதும்!...


*இலக்கியன் மு.முர்சித்* 

Thursday 24 April 2014

சிவப்பு ஒப்பங்கள்

















கனவுள் மேய்ந்த 
ஆயிரம் இரவுகள்!,
கதவுகள் உடைந்த
ஓட்டை முகாம்கள்!, 

சொந்தமண் தொலைத்து
தெருக்களில் நாங்கள்..
முகவரிதேடும் வாழ்க்கை!..
''அகதி'' என்ற பெயரில்...

இவை எல்லாம் 
இருக்கப்போவதில்லை...

துப்பாக்கி ரவைகளுக்கும்,
பல்குழல் செல்களுக்கும்
'மனித நேயம்' தெரிந்திருந்தால்!..

அந்த
கறுப்பு நினைவுகளில் 
சிவப்பு ஒப்பங்கள்-மனித
வெள்ளை மனங்கள்
கொள்ளை போனதால்!..

*இலக்கியன் மு.முர்சித் *

யார் அவள்?


  

















அவளை
நினைக்கிறேன்..
என்
இதயம்
கனிகிறது!..

அவளை
பார்க்கிறேன்
என்
விழிகள்
மணக்கிறது!..

அவளை
தொடர்கிறேன்
என்
வாழ்க்கை
நீள்கிறது!..

அவளை
கதைக்கிறேன்
என்
வார்த்தை
கவிக்கிறது!..

யார் அவள்?..
என்
மனத்தின்
மணம்
இவள்!..


*இலக்கியன் மு.முர்சித் *

கா..தோ..
















காதலுக்கு சாவு 
காதலர்களுக்கு நோவு
காதல் தோல்வி! 

காதலை தோல்வி
காதலிக்கும் போதுதான் 
காதலர்கள் பிரிகின்றனர்!

காதல்! 
என்றும் தோற்பதில்லை... 
காதலர்கள்! 
தான் தோற்கின்றனர்.. 

*இலக்கியன் மு.முர்சித் *

Tuesday 22 April 2014

எனது பார்வையில் கவிஞர் இலக்கியன் மு.முர்சித்....





{நான், எழுத்தாளர் எஸ்.முத்துமீரா, கலாநிதி மர்சும் மிசா}


-எஸ்.முத்துமீரான்-


ஒரு மனிதனுடைய எண்ணங்களின் வெளிப்பாடுகளையும்,அவனினுடைய கற்பனையின் செயற்பாடுகளையும் உலகில் படம்பிடித்து காட்டி, எங்கள் மத்தியில் உலாவரச்செய்யும் எழுத்துக்களை நாங்கள் கவிதைகள்,கதைகள்,நாவல்கள் என்று கூறுகிறோம் இவைகள் தான் ஒவ்வொரு படைப்பாளியின் ஆற்றல்களையும் சிறப்பையும் வாழ்வியலின் ஆழத்தையும் அனுபவத்தின் ஆளுமையும் கொண்டதாகப்பிரதிபலிக்கும். இது தான் இலக்கிய படைப்புக்கள் எங்களுக்கு காட்டும் சிறப்புக்கள் ஆகும்.

இளம் கவிஞர் முர்சித்தின் கவிதைகள் எல்லாம் எங்களுக்கு இதைத்தான் கூறுகிறது. நல்ல கவிதைத்துவமும்,கற்பனை வளமும் நிறைந்துள்ள இவருடைய கவிதைகள் புதுமையை தேடி காட்டாறு போல் ஓடிக்கொண்டிருக்கின்றது. புதுக்கவிதை வடிவில் தனக்கென ஒரு தனிவடிவையும்,நடையையும் உருவாக்கி தன் படைப்புக்களைத்தந்து கொண்டிருக்கும் இக்கவிஞனின் எதிர்காலம் இலக்கிய உலகில் பிரகாசிக்கும் என்பதை இவருடைய படைப்புக்கள் கட்டியம் கூறுகின்றன. எதிலும் புதுமையைத்தேடும் இக்கவிஞன் தன் உத்தியிலும், ஆற்றலிலும், ஆளுமையைக்காட்டி, கவிதைப்போக்கிலும் நடையிலும் புரட்சி செய்துள்ளார். இது இவருடைய திறமைக்கும், ஆளுமைக்கும் மேலும் மெருகூட்டி நிற்கிறது.

எடுத்த எடுப்பிலேயே, தான் தட்டுத்தடுமாறிப்படைக்கிற கவிதைகளை, கதைகளை உடன் நூல்களாக வெளியிடத்துடிக்கும் படைப்பாளிகள் போலில்லாமல், இன்னும் நல்லபடி தன்னுடைய கவிதைகளை நன்றாக புடம் போட்ட பின்னர் நூல்களாக வெளியிட்டால் இலக்கிய உலகம் வரவேற்கும் என்பது எனது கணிப்பீடு. தீட்டத்தீட்டத்தான் கத்தி கூராகும். கூரான கத்தியால்தான் வாழ்வில் பிரயோசனமும் பயனும் உண்டு. இது தான் உண்மை. இதை விட்டுவிட்டு எதையும் தாங்கள் நினைத்த படியெல்லாம் வசனங்களாக கிறிக்கிவிட்டு அதற்கு கவிதைகள் என்ற பெயரைச்சூட்டி இலக்கிய உலகில் உலாவச்செய்வது, புற்றீசல்களின் வாழ்வைப்போன்றுதான் ஆகிவிடும். இந்நிலை இலக்கிய உலகில் மாற வேண்டும். இதுவே இலக்கிய வளர்ச்சிக்கு நல்ல படிகளாக இருக்கும்.

இதைவிட்டு தாங்களே தங்கள் நூல்களுக்கு வெளியிட்டு விழாக்களையும், அறிமுக விழாக்களையும் நடத்தி, அவைகளில் கூலிக்கு மாரடிப்பவர்களைக்கொண்டு புகழ்கள் பாடச்செய்து, பன்னாடைகள் போர்த்தி , உதவாத, உப்புச்சப்பில்லா போலி பட்டங்களைப் பெற்று அன்நிகழ்வுகளின் புகைப்படங்களை பத்திரிகைகளில் மற்றும் இணையங்களில் போட்டுத் திருப்தியடைவது, குளக்கரையில் இருந்து பீ உருட்டியபடி மேலுக்கு வரத்துடிக்கும் கறுத்த குளக்கரை வண்டின் அறியாமையை ஒத்த செயலாகவே முடியும்.
இந்நிலை இலக்கிய உலகில் எப்பொழுது அழிகின்றதோ அன்றுதான் இலக்கிய உலகில் மணம் வீசும் மலர்களும், சுவையுள்ள கனிகளும் கிடைக்கம். எங்களிலும் ஒரு தாகூர், பாரதி, பாரதிதாசன், கவிக்கோ.அப்துர்ரகுமான், புதுமைப்பித்தன், மகாகவி முருகையன் போனறவர்கள் வருவார்கள். இவர்களைப் போன்றவர்கள் வருவதற்கு முயற்சிப்போம்.

கவிஞர் தம்பி முர்சித்தின் கவிதைகள் இன்னும் புடம்போடப்படல் வேண்டும். அவ்வாராயின் வருங்காலத்தில் இவருடைய கவிதைகள் பல ஆளுமை கொண்ட படைப்புக்களாக வரும் என்பதில் ஐயமில்லை. நல்ல பணிவும், பண்பும், கவித்துவமும் உள்ள இக்கவிஞனின் வருங்காலம், வளமுள்ளதாகவும், சிறப்பாகவும் இலக்கிய உலகில் இருக்க என் வாழ்த்துக்களும், பிராத்தனைகளும்