Monday 8 December 2014

உலகத்தமிழ் இலக்கியத்தின் இலட்சிய புத்திரன் 'எஸ்.பொ.'எனும் எஸ்.பொன்னுத்துரை.

தமிழ் உலகின் மூத்த ஆளுமை 'எஸ்.பொ' எனப்படும் எஸ்.பொன்னுத்துரை!, அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் 26-11-2014 அன்று செவ்வாய்க்கிழமை காலமானார்.
இவரது மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு ஈடுசெய்யமுடியாத இழப்பாகும். இவரை பற்றியும் இவரது இலக்கிய பணிபற்றியும் இன்றைய மற்றுமன்றி எதிர்கால இலக்கிய செயற்பாட்டாளர்கள், ஆர்வலர்கள் மற்றும் எழுத்தாளர்கள் அனைரும் தெரிந்திருத்தல் காலத்தின் கட்டாயமாகும் அந்தவகையில் எஸ்.போவின் உற்ற நண்பரான இளம்பிறை எம்.ஏ ரகுமபன், மூத்த இலக்கிவாதி, கலாபூசணம், சட்டத்தரணி எஸ்.முத்துமீரான் மற்றும் இஸ்லாமிய இலக்கியக்காவலர் எஸ்.ஏ.ஆர்.எம் செய்யிது ஹஸன் மௌலானா ஆகியோரின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த கட்டுரை எழுதியிருக்கிறேன். 


'எஸ்.பொ' எனப்படும் எஸ். பொன்னுத்துரை 1932 ஜூன் 4ம் திகதி யாழ்ப்பாணம், நல்லூரில்; சண்முகம்  தம்பதியரின்  மகனாக பிறந்த இவர் ஈழத்தின் மூத்த, தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவர். இவர் சிறுகதை, புதினம், நாடகம், கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு, அரசியல் என பல பரிமாணங்களிலும் இலக்கியவுலகில் தனி ராஜாங்கம் செய்தவர் மட்டுமன்றி 40 இற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். யாழ்ப்பாணத்தில்  தமது  ஆரம்பக்கல்வியையும்  உயர்கல்வியையும் தொடர்ந்து மேற்படிப்பிற்;காக  தமிழ்நாட்டிற்குச்சென்றார்.  அங்கு தாம்பரம் கிறிஸ்தவக்கல்லூரியில்  பட்டப்படிப்பை நிறைவு செய்துகொண்ட   எஸ்.பொ. அண்ணாமலை பல்கலைக்கழகத்திலும்  பயின்றார். பாடசாலைப்பருவம்  முதல்  தீவிர  வாசிப்பில்  ஈடுபட்டிருந்த பொன்னுத்துரை, இளம் வயதிலேயே  கலைஇலக்கியத்  தேடலை  தவமாகவே தொடர்ந்தவர்.     ஆங்கில, ஆபிரிக்க, அராபிய மற்றும் உலக  இலக்கியங்களின்  மீதும் ஈடுபாடு காண்பித்தார். 
1940  ஆம்  ஆண்டில் அவரது  மூத்த  சகோதரர்  தம்பையா    மாணவர்   தேர்ச்சிக்கழகத்தின்   சார்பில் 'ஞானோதயம்'   என்ற  கையெழுத்து   சஞ்சிகையை  நடத்தியபொழுது அதன்  பக்கங்களை நிரப்புவதற்காகவும்  இலக்கியப்படைப்புகளை அதில்    எழுதியிருக்கிறார். பெரும்பாலான  இலக்கியவாதிகளை   பாரதியும்  பாரதிதாசனும் ஆரம்பகாலத்தில்   பெரிதும்   பாதித்திருப்பது போன்று பொன்னுத்துரைக்கும்  இந்த   இரண்டு   ஆளுமைகளும்  தாக்கத்தை ஏற்படுத்தியிருககி;ரார்கள். அவர்களின்    கவியாற்றலின்  பாதிப்பினால் பொன்னுத்துரை தமது 13வது  வயதில்   எழுத   ஆரம்பித்திருப்பவர். தான் எழுதிய   முதலாவது   கவிதை   இலங்கையின் 'வீரகேசரியில்'   வெளியானது.   அதுவே  அச்சில்  வெளிவந்த  அவரது  கன்னிப்படைப்பு. 


   1947  இன்  பின்னர்  த.ராஜகோபால்  என்ற  ஒரு  பெரியவரின் தொடர்பினால்  இந்திய   எழுத்தாளர்களின்  படைப்புகள் பொன்னுத்துரைக்கு    வாசிக்கக்கிடைத்திருக்கிறது.    

தமது   பதினைந்து  வயதிலேயே  இந்தியாவின்  புகழ்பூத்த படைப்பாளிகளின்   தீவிர  வாசகராகிவிட்டதனால்  பொன்னுத்துரையும்  இலக்கியப்பிரதிகளை   எழுதத்தொடங்கினார். தம்மை    இந்தத்துறையில்  வளர்த்துவிட்ட    த. ராஜகோபால் எனும் பெரியவருக்கே   தமது   'தீ'   நாவலையும்    சமர்ப்பணம்   செய்தார். பொன்னுத்துரையின்   முதலாவது  சிறுகதை  1948  இல்  தந்தை செல்வநாயம்   கொழும்பிலிருந்து  வெளியிட்ட  'சுதந்திரன்' பத்திரிகையில் வெளியானது.   இலங்கை  இதழ்களில்  மட்டுமன்றி தமது  17   வயதில்    தமிழக   இதழ்களான   காதல்,  பிரசண்ட  விகடன், ஆனந்த போதினி முதலானவற்றிலும்  எழுதியிருக்கிறார்.

இலங்கையில்  பல  மூத்த  எழுத்தாளர்கள்  ஆரம்பத்தில்  தமிழகத்தின்   மெட்ராஸ்; (சென்னை) பாதிப்பினால்  தமது  கதைகளின் பின்புலமாக   மெரீனா  பீச்சையும்  மவுண்ட்  ரோட்டையும் மையமாகக்கொண்டிருந்தபொழுது  தாமும்  அவ்வாறு அந்தப்பகைப்புலத்தை   உள்வாங்காமல்    ஈழத்து    மண்வாசனையுடன் படைப்பிலக்கியத்தில்    ஈடுபட்டவர்களின்   வரிசையில் இணைந்துகொண்டவர்   பொன்னுத்துரை.

முழுமையான  கற்பனாவாதத்தை   தவிர்த்து    யதார்த்த   இலக்கிய மரபினைத்தோற்றுவித்து சிறுகதையில்,  உருவம்,  உள்ளடக்கம் உத்திகள் என்பன வெற்றில்  மாற்றங்களை   இலங்கையில்   ஏற்படுத்திய   முக்கியஸ்தகர்களில்   ஒருவராக    விளங்கியவர் இவர.; இலங்கையின்    இலக்கிய    மறுமலர்ச்சிக் காலத்திலிருந்து இவரின்   ஆக்க   இலக்கியங்களை    இனம்காணமுடியும். அதனால்   ஏறக்குறைய   ஏழு தசாப்தகாலம்   ( சராசரி; 68 ஆண்டுகள்)   அயராமல்  எழுதிக்கொண்டிருந்தவர்.

அவரது  முதலாவது  நாவல்  'தீ'   தமிழகத்தில்  சரஸ்வதி  இதழை நடத்திய  விஜயபாஸ்கரனின்   முயற்சியால்    வெளியானது. இந்நாவல்    ஈழத்து   இலக்கிய    வளர்ச்சியில்  திருப்புமுனையை தோற்றுவித்ததுடன்   சர்ச்சைகளையும்   உருவாக்கியது.  'தீயை    தீயிட்டுக்கொளுத்துங்கள்'   முதலான   குரல்களும்   எழுந்தன. இவ்வாறு   அவரது    முதல்   நாவல்    தீவிர  வாசிப்புக்கும் கவனிப்புக்கும்    சர்ச்சைக்கும்    இலக்கானது   முதல் பொன்னுத்துரையும்    இலக்கிய   உலகில்   சர்ச்சைக்குரிய மனிதராகவே பார்க்கப்பட்டார். தொடர்ச்சியாக    அவர்   பல   தளங்களில்    அவ்வாறே  விளங்கினார். அதனால் அவரை  ஒரு  'இலக்கிய  கலகக்காரன்'  என்றும்  பரீட்சார்த்த  முயற்சிகளில்  ஈடுபடும்  இலக்கியவாதி  என்றும் அழைக்கப்படலானார். சூழலில்  அவரது    கருத்துக்களுக்கு   நிகழ்ந்த  எதிர்வினைகளினால் அவர்   தன்னை   தொடர்ந்தும்  பல  நிலைகளிலும்  எதிர்வினைகளை எதிர்நோக்கும்   எழுத்தாளராகவே    இனம்காட்டி    வரலானார்.  தொடக்கத்தில்   அவரும்   அவரது   நண்பர்களும்  யாழ்ப்பாணத்தில் பின்வரும் புனைபெயர்களில் தம்மை    அழைத்துக்கொண்டனர்.




இந்த   நண்பர்கள்   கம்யூனிஸக்கொள்கை   கோட்பாடுகளினால் ஆகர்ஷிக்கப்பட்டிருந்தவர்கள்.   டானியல்-புரட்சி தாசன்,  டொமினிக் ஜீவா-புரட்சி   மோகன், பொன்னுத்துரை-புரட்சிப்பித்தன்.  பொன்னுத்துரை  இவ்வாறு  முற்போக்கு  கூடாரத்தில்  தமது  பெயரை   புரட்சியுடன்   இணைத்துக்கொண்டாலும் கூட    ஒரு கட்டத்தில்    தனது  புனைபெயரை   'பழமை தாசன்' என்றும் மாற்றிக்கொண்டவர். அவர்   அடிக்கடி  புனைப்பெயர்களில்  எழுதுவதை வழக்கமாகக்கொண்டிருந்தாலும்   இலக்கிய    உலகில்   நிலைத்த பெயர்   'எஸ்.பொ.'   என்ற   இரண்டு    எழுத்துக்கள்தான்.

1956  இல்  ஆசிரியத்தொழில்சார்ந்து   அவரது  வாழ்வு  கிழக்கு மாகாணம்    நோக்கி   திசை   திரும்பியது. இலங்கையிலும் நைஜீரியாவிலும் ஆங்கில ஆசிரியராக பணியாற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.   கருத்து  ரீதியாக முற்போக்கு  எழுத்தாளர்களுடன்  முரண்பட்டு,  1960  களில்  கொழும்;பு சாகிராக்கல்லூரியில்  நடந்த  மாநாட்டிலிருந்து  வெளிநடப்புச்செய்தார். அப்பொழுது   அவருடன்    இணைந்து   வெளியேறியவர்கள் இளம்பிறை   ரஹ்மான்,   வ.அ. இராசரத்தினம்   உட்பட   வேறும்  சிலர். இவர்களில்   இராசரத்தினம்    மூதூரைச்சேர்ந்த   ஆசிரியர். மறைந்துவிட்டார்.   மற்றவர்    கொழும்பில்   ஆட்டுப்பட்டித் தெருவில் நீண்ட காலம்    ரெயின்போ   என்ற    அச்சகத்தை  நடத்தி   அரசு வெளியீடு   என்ற  பதிப்பகத்தின்  மூலம்  பல   நூல்களையும் இளம்பிறை   என்ற  மாசிகையையும்   வெளியிட்ட  ரஹ்மான்.   இவர் தற்பொழுது    சென்னையில்    கோடம்பாக்கத்தில்   வசிக்கின்றார்.

பொன்னுத்துரையின்    இலக்கியச்செயற்பாடுகளுக்கு  தொடர்ந்தும் உறுதுணையாக   விளங்கியவர்  ரஹ்மான்.   பொன்னுத்துரையின் இலக்கிய  வாழ்வில்  இரண்டறக்கலந்த  இவரின்  தொடர்ச்சியான நட்பினால்தான்   பிற்காலத்தில்   சென்னையில்   மித்ரா   பதிப்பகம் உருவானது.   எனவே   ரஹ்மான்    பொன்னுத்துரையின்   வாழ்வில் மிகவும்   முக்கியமான   இலக்கியசகா.

எஸ்.பொ.   சென்னையில்  மித்ரா  பதிப்பகத்தை   உருவாக்குவதற்கு பக்கபலமாக   இருந்தவர்    அவரது   மூத்த   புதல்வன்  டொக்டர் அநுரா. முற்போக்கு  எழுத்தாளர்  சங்கத்திலிருந்து  வெளியேறிய பொன்னுத்துரை அடுத்த  கட்டமாக  அதற்கு  எதிராக  நற்போக்கு இலக்கிய முகாமை  தோற்றுவிக்க  முனைந்தார். முற்போக்குக்கு   எதிராக 'நற்போக்கு' இலக்கியக் கோட்பாட்டை வகுத்துக்கொண்டார்.        'நற்போக்கு    என்பது முற்போக்கு (சய) கம்யூனிஸ்ட்    கட்சி.   பிற்போக்கு  முகாம்  அமைக்க முடியாது. அதனால்   நற்போக்கு  என சூட்டிக்கொண்டோம்'  என்று  தமது வாக்கு மூலத்தை  பதிவுசெய்துகொண்ட  பொன்னுத்துரை, காலம் கடந்து   மேலும்   விரிவாக    தேடல்  என்ற    நேர்காணல் ( டென்மார்க் தர்மகுலசிங்கம்  எழுதியது)    நூலிலும்   நற்போக்கு   என்ற  நூலிலும்   முற்போக்கு  இலக்கிய   முகாமிலிருந்து   தான் வெளியேறியதற்கான    நியாயங்களை  விரிவாக    பதிவு   செய்துள்ளார்.


பொன்னுத்துரையிடமிருந்த   ஆழமான   தமிழ்  இலக்கிய   ஆற்றலும் கல்வியினால்   அவர்  பெற்றுக்கொண்ட  ஆங்கில  அறிவுமே பிற்காலத்தில்    புகழ்பெற்ற  சில  பிறமொழி   இலக்கியப்படைப்புகளை ஆங்கிலமொழி  மூலம்  படித்து  தமிழுக்கு மொழிபெயர்க்கச்செய்திருக்கிறது. தமிழ்நாட்டிலிருந்து    தமது  பட்டப்படிப்பை  நிறைவு  செய்துகொண்டு திரும்பியவேளையில்  வடமாகாண  தமிழ்   சமூக   அமைப்பு   குறித்த பிரக்ஞை   அவரை   தீவிரமாக    சிந்திக்கவைத்திருக்கிறது. அவ்வேளையில்   அவருடைய   தோழர்களாக    விளங்கிய   பலர் முற்போக்கான    சிந்தனை    உடையவர்களாகவும்   மார்க்ஸீய கோட்பாடுகளை    வரித்துக்கொண்டவர்களாகவும்   விளங்கினர்.

பொன்னுத்துரையின்   மூத்த  சகோதரி  திருமணம்  முடித்த  எம்.ஸி சுப்பிரமணியம்   வடமாகாண   சிறுபான்மை  வெகுஜன  அமைப்பின் ஸ்தாபகராகவும்  சமூகப்பணியாளராகவும்  விளங்கியவர்.  இலங்கை கம்யூனிஸ்ட்   கட்சியின்   (மாஸ்கோ)   உறுப்பினர்.    பின்னாளில் இலங்கை    பாராளுமன்றத்தில்    நியமன   எம்.பி.   ஆகவும் பதவியேற்றவர். பொன்னுத்துரையின்    குடும்ப  உறவுக்குள்ளும்  அவரது  தோழர்கள் வட்டத்திலும் சாதி  ஒழிப்புக்குறித்த  எண்ணங்களே பரவலாகியிருந்தமையினால்    பொன்னுத்துரையும்   அவர்களினால் உள்வாங்கப்பட்டார்.    அவர்கள்   மட்டத்தில்    பட்டம்   படித்த   ஒருவர் என்ற மேலதிக   தகைமையும்  இவருக்கு   கிடைத்தது.


இலங்கையின்    மூத்த  எழுத்தாளர்கள்   கே. டானியல்,  டொமினிக்ஜீவா, செ. கணேசலிங்கன்    முதலானோருடன்   தினமும்   இலக்கியம் தொடர்பான    உரையாடல்களை   தொடர்ந்தார்.   கணேசலிங்கன்  யாழ். பரமேஸ்வராக்கல்லூரி   மாணவராக   அவ்வேளையில் பயின்றுகொண்டிருந்தார். டானியலும்    டொமினிக் ஜீவாவும்   தத்தமது  குடும்பச்சூழல்களினால் படிப்பைத்தொடர    முடியாமல்   தொழில்களில்   ஈடுபட்டனர். எனினும்   இவர்கள்   நால்வரும்   அடிக்கடி   சந்தித்து  தமக்குள்   ஒரு இலக்கிய  வட்டத்தையும்   ஏற்படுத்திக்கொண்டனர்.   பொன்னுத்துரை ஆசிரியப்பணியில்   ஈடுபட்டார்.    அவர்   மட்டக்களப்பில்  பணியாற்றிய   காலத்தில்  தம்முடன்  பணியாற்றிய   ஆசிரியையை  காதல் திருமணம்   செய்துகொண்டார்.

பொதுவாக  எழுத்தாளர்களின்  மனைவிமார்  தமது   கணவரின் கலை இலக்கிய   பொதுவாழ்வில்   அந்நியப்பட்டிருப்பவர்கள்.  ஆனால்,  பொன்னுத்துரையின்  மனைவி மகாகவி   பாரதியின்  கூற்றுப்போன்று 'காதலொருவனைக்   கைப்பிடித்தே   அவன் காரியம்   யாவிலும்   கைகொடுத்து   வாழ்ந்தவர்'. 

அவரது  பக்கபலம்  பொன்னுத்துரையின்  படைப்பு  இலக்கிய முயற்சியில்   எதுவித  அயற்சிக்கும்  இடம்கொடுக்கவில்லை. அதனால்தான்    பொன்னுத்துரை   சிறுகதை,    நாவல்,    நாடகம், கட்டுரை,    வாழ்க்கை   வரலாறு,   விமர்சனம்,    ஆய்வு,   மொழிபெயர்ப்பு முதலான  பல்துறைகளில்   தடம்   பதித்து  பல   நூல்களை  படைக்க முடிந்திருக்கிறது   என்றும்  கருதமுடியும்.  அத்துடன்  சில நூல்களின்   தொகுப்பாசிரியராகவும்   தமது   பணி  தொடர்ந்திருப்பவர்.சடங்கு, தீ, ஆண்மை, வீ, நனைவிடைதோய்தல், இனி ஒரு விதி செய்வோம் எனப் பல புதினங்களை எழுதிப் புகழ் பெற்றார். பொன்னுத்துரையின் நாடகங்கள் இலங்கை, இந்தியா, ஆத்திரேலியா முதலான நாடுகளில் மேடையேறியுள்ளன. தமிழ்நாட்டில் சில தொலைக்காட்சிகளிலும் தொடர் நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார்.

ஆத்திரேலியாவில் சிறிது காலம் வெளிவந்த 'அக்கினிக்குஞ்சு' என்ற பன்னாட்டு இதழின் கௌரவ ஆசிரியராக இருந்தார். 'செம்பென் ஒஸ்மான' என்ற செனகல் நாட்டு எழுத்தாளர் எழுதிய ஹால 'ஓயடய' என்ற நாவலை மொழிபெயர்த்துள்ளார். மற்றும் 'நுகுகி வா தியங்கோ' என்ற கென்யா நாட்டு இலக்கிய எழுத்தாளரின் 'றுநநி ழேவ ஊhடைன' என்ற நாவலை தமிழில் 'தேம்பி அழாதே பாப்பா' என்ற பெயரில் மொழிபெயர்த்துள்ளார்.

கொழும்பிலிருந்து நீண்டகாலமாக வெளியாகும் ஞானம் இதழின் ஆசிரியர் டொக்டர் தி. ஞானசேகரனின் கேள்விகளுக்கு எஸ்.பொ தெரிவிக்கும் நீண்ட பதில்களைக்கொண்ட தொடர் நேர்காணல் பல மாதங்களாக ஞானம் இதழில் வெளியானது. பின்னர் 'தீதும் நன்றும் பிறர்தர வரா' என்ற தலைப்பில் குறிப்பிட்ட நேர்காணல் நூல் 2007 இல் வெளியானது. 1924 பக்கங்களில் எஸ்.பொ. எழுதிய அவரது சுயவரலாற்று ஆவணம் வரலாற்றில் வாழ்தல் இரண்டு பாகங்களாக ஒரேவேளையில் வெளியானது.அதுமட்டுமன்றி
சென்னையில் 'மித்ர' பதிப்பகத்தின் மூலம் நூல் வெளியீடுகளிலும் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.

பின்வரும்   அவரது   நூல்களே  அதற்கு   ஆதாரம்:

1. வீ (சிறுகதைகள்)
2. ஆண்மை (சிறுகதைத் தொகுதி)
3. எஸ்.பொ கதைகள் 
4. அவா  (சிறுகதைத் தொகுதி)
5. தீ (நாவல்)
6. சடங்கு (நாவல்)
7. மாயினி (நாவல்)
8. அப்பையா
9. கீதை  நிழலில் 
10. அப்பாவும்  மகனும் 
11. வலை 
12. முள் 
13. பூ  
14. தேடல் 
15. முறுவல் 
16. இஸ்லாமும்  தமிழும்
17. பெருங்காப்பியம்  பத்துப்பற்றிய சொற்பொழிவுகள் (தொகுப்பாசிரியர்)   
18. மத்தாப்பூ
19. சதுரங்கம்
20. ? (கேள்விக்குறியில் ஒரு நூல்)  
21. நனவிடை   தோய்தல்
22. நீலாவணன்   நினைவுகள்
23. இனி  ஒரு  விதி  செய்வோம்
24. வரலாற்றில்  வாழ்தல் (சுயசரிதை)
25. ஈடு (நாடகம்)  (அ.சந்திரஹாசனுடன் சேர்ந்து எழுதியது)
26. மணி மகுடம்
27. தீதும் நன்றும் 
28. காந்தீயக் கதைகள் 
29. காந்தி தரிசனம்
30. மகாவம்ச (மொழிபெயர்ப்பு)



இவருக்கு தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2010 ஆம் ஆண்டுக்கான வாழ்நாள் இயல் விருது வழங்கப்பட்டது.

பொன்னுத்துரை கிறிஸ்தவ கல்லூரியில் கற்றதனாலும் கிறிஸ்தவ பாடசாலையில் தொடக்கத்தில் பணியாற்றியதனாலும்தானோ  என்னவோ கிறிஸ்தவர்கள் தமது மதரீதியான சிந்தனையில் அடிக்கடி பயன்படுத்தும் ஊழியக்காரர் என்ற சொற்பதத்தை தமது வாழ்வில் அடிக்கடி பயன்படுத்திவந்திருக்கிறார். ஆனால் இவர் மதம் சார்ந்து அல்ல இலக்கியம் சார்ந்து தன்னை இலக்கிய  எழுத்தூழியக்காரன்  என்றே   குறிப்பிட்டு வந்தவர். பொன்னுத்துரைக்கு இலக்கியத்தில் பல்வேறு இஸங்களிலும் ஆபிரிக்க கறுப்பின மக்களின் இலக்கியத்திலும் ஈடுபாடு நீடித்த அதேசமயம் ஆன்மீக ரீதியான  சிந்தனைகளும்  அவரது  வாழ்வில் தொடர்ந்திருக்கிறது.

பொன்னுத்துரையின் நாடகங்கள் இலங்கை, தமிழ் நாடு அவுஸ்திரேலியா முதலான நாடுகளிலும் மேடையேறியுள்ளன. தமிழ் நாட்டில் சில தொலைக்காட்சிகளிலும் தொடர் நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார். தனித்தும் எழுதினார் சிலருடன் இணைந்தும் எழுதினார். உதாரணமாக  அவர் இணைந்து எழுதியவை மத்தாப்பு - நாவல். எஸ்.பொ.வுடன் இணைந்தவர்கள்: இ.நாகராஜன், இரசிகமணி கனக செந்திநாதன், சு.வேலுப்பிள்ளை, குறமகள். ஈழத்து இலக்கியத்தில் முதல் முதலில் வெளியான பரீட்சார்த்த நாவல் மத்தாப்பு. சதுரங்கம் - கட்டுரை இணைந்தவர்கள்: ஆர். பாலகிருஷ்ணன், வ.அ. இராசரத்தினம், எம்.ஏ. ரஹ்மான், சாலை இளந்திரையன். பொன்னுத்துரை ஆக்க இலக்கியத்துறைக்கு அப்பால் சிற்றிதழ்களை நடத்தும் பெருவிருப்பும் கொண்டிருந்தவர். கொழும்பில் பிரபல்யமான விவேகானந்தா கல்லூரியில் அவர் ஆசிரியராக பணியாற்றிய காலத்தில் ரஹ்மான நடத்திய இளம்பிறையில் பொன்னுத்துரை உத்தியோகப்பற்றில்லாத ஆசிரியராகவே விளங்கினார். ரஹ்மான் தொடங்கிய அரசு வெளியீட்டு நிறுவனம் அகஸ்தியர் தளையசிங்கம், பொன்னுத்துரை, இரசிகமணி கனகசெந்திநான்  உட்பட பலரது நூல்களை வெளியிட்டது.
பொன்னுத்துரை இலக்கியத்தில் செம்மைப்படுத்தும் மரபினையும் ஈழத்து இலக்கியவளர்ச்சியில் உருவாக்கினார். பொதுவாக படைப்பாளிகள் தமது படைப்புகளை தாமே படைத்துவிட்டு அவசர அவசரமாக வெளியிடுவதில் அவருக்கு உடன்பாடு இருந்ததில்லை. பொன்னுத்துரை தமது சிறுகதை, நாவல், கட்டுரை, விமர்சனங்களையும் எழுதியபின்னர் மீண்டும் மீண்டும் படித்து செம்மைப்படுத்தும் இயல்பினைக்கொண்டிருந்தவர். மற்றவர்களின் படைப்புகளையும் நுனிப்புல் மேயாமல் ஆழ்ந்து படித்து கருத்துச்சொல்லி அவற்றில் நீக்கவேண்டிய இணைக்கவேண்டிய செம்மைப்படுத்த வேண்டிய அம்சங்களை குறித்துக்கொடுப்பார்.

தனது படைப்புகளையும் மற்றவர்களிடம் படிக்கக்கொடுத்து கருத்துக்கேட்டதன் பின்னரே மேலும் செம்மைப்படுத்தி அச்சுக்கு அனுப்புவார். இந்த இயல்பு அவர் எழுதத்தொடங்கிய காலத்திலிருந்து தொடர்ந்தது. மற்றவர்களின் படைப்புகளை செம்மைப்படுத்தும் பொழுது அவருக்கிருக்கும் நிதானம் சிறப்பானது. இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் அவுஸ்திரேலியா உட்பட ஐரோப்பிய நாடுகளிலும் வதியும் பலரது படைப்புகளை அவர் செம்மைப்படுத்தியிருக்கிறார். சென்னையில் மித்ர பதிப்பகத்தின் வெளியீடுகளில் அழகியலையும் அச்சமைப்பிலும் பக்கவடிவமைப்பிலும்  கலைநேர்த்தியையும் காண்பித்தார். 

புலம்பெயர்ந்தோர் இலக்கியமே எதிர்காலத்தில் தலைமை ஏற்கும் என்ற கருத்தையும் அவர் சில வருடங்களுக்கு முன்னர் சொன்னதனால் இலக்கியஉலகில் குறிப்பாக தமிழ்நாட்டில் சர்ச்சை எழுந்தது. குறிப்பிட்ட புலம்பெயர்ந்தோர் இலக்கியம் என்ற பதப்பிரயோகத்தை முதல் முதலில் அறிமுகப்படுத்தியவரும் பொன்னுத்துரைதான். 1989 இல் இந்தக்கனதியான இரண்டு சொற்களை அவர் மெல்பனில் நடந்த இலக்கிய விழாவில் முன்மொழிந்தார்.

அவருக்கு 2010 இற்கான கனேடிய இலக்கியத்தோட்டத்தின் இயல்விருது 2011 ஆம் ஆண்டு கனடாவில் வழங்கப்பட்டது. பொன்னுத்துரையின் பல நூல்களுக்கு தமிழகத்தின் மூத்த முன்னணி படைப்பாளிகளும் விமர்சகர்களும் முன்னுரை வழங்கியுள்ளனர். ஜெயமோகன் தமது ஈழ இலக்கியம் என்ற நூலில் எஸ்.பொ.வை யாழ்ப்பாணத்துப்பாணன் என்றே விளித்து தமது விரிவான பார்வையை பதிவுசெய்துள்ளார்.

சென்னையில் மித்ரா பதிப்பகத்தின் சார்பில் முழுநாள் இலக்கியக்கருத்தரங்கினை நடத்தியிருக்கும் எஸ்.பொ. அவரது இலக்கியப்பிரவேச ஆரம்ப காலத் தோழர் மல்லிகை ஜீவாவை அதற்கு அழைத்து பாராட்டி விருதுவழங்கி கௌரவித்தார். பொன்னுத்துரையின் வாழ்வும் பணிகளும் இலங்கை தமிழ்நாடு ஆபிரிக்கா அவுஸ்திரேலியா என்று பரந்துபட்டிருந்தது முக்கியமானது. அதனால் அவர் சர்வதேசப்பார்வை மிக்க ஆளுமையுள்ள படைப்பாளியாகவும் விளங்கினார்.

எஸ்.பொன்னுத்துரை 2014 நவம்பர் 26 அன்று சிட்னி கொன்கோர்ட் மருத்துவமனையில் தனது 82வது வயதில் காலமானது நீங்காத்துயரானாலும் அவரது படைப்புகள் என்றும் நிலைத்து இலக்கிய உலகை செழிமை செய்யும் என்பதில் ஐயமில்லை. 












-மு.அ.மு. முர்சித் (இலக்கியன்)-



No comments:

Post a Comment