Saturday 14 October 2023

இலங்கை முஸ்லிம் சமூகத்தின் அரசியல் செல்நெறி: ஒரு பார்வை

முர்ஷித்

முஸ்லிம் சமூகமானது இலங்கையின் மொத்த சனத் தொகையில் சுமார் 9.7% ஆகும். இவர்கள் இலங்கையின் மூன்றாவது பெரிய சமூகமாக உள்ளனர்.

இந்த சமூகமானது சமூக, பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாக பல்வேறு பிரிவுகளைக் கொண்டுள்ளது.

இதனால், இலங்கை முஸ்லிம் சமூகத்தின் அரசியல் செல்நெறியானது ஒற்றைத் திசை கொண்டதல்ல என்பதை குறிப்பிடமுடியும்.


#கோட்பாட்டு_ரீதியான_வகை.

இலங்கை முஸ்லிம் சமூகத்தின் அரசியல் செல்நெறியை கடந்தகால அனுபவங்களூடாக கோட்பாட்டு ரீதியாக  இருவேறு முக்கிய வகைகளாக நோக்க முடியும்.

#பெயரளவிலான_தேசியவாதம்:

இந்த வகையானது இலங்கை அரசாங்கத்தில் முக்கிய பங்காளியாக  இருக்க  வேண்டும் என்பதில் உறுதியாக உள்ள மனநிலையை குறிக்கும்.

இவ் வகை அரசியல்வாதிகள் பொதுவாக  அரசாங்கத்தின் அல்லது ஆட்சியிலுள்ள பெருந்தேசிய கட்சிகளில் தங்களை  இணத்துக் கொண்டு  பல்வேறு அமைச்சுக்கள் மற்றும் வரப்பிரசாதங்களை பெற்று   செயல்படுகிறார்கள்.

#சமூக_செயலாளத்துவம்.

இலங்கை முஸ்லிம் சமூகத்தின் சமூக மற்றும் பொருளாதார நலன்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. 

இந்த வகை அரசியல்வாதிகள் பொதுவாக சிறிய கட்சிகள் அல்லது சுயேட்சை வேட்பாளர்களாக தனித்துவமான  அடையாளங்களுடன் செயல்படுகிறார்கள்.

#மாற்றங்கள்_கண்ட_பாதை.

இலங்கை முஸ்லிம் சமூகத்தின் அரசியல் செல்நெறி காலப்போக்கில் பல்வேறு மாற்றங்களை கண்டு வந்துள்ளமையை நாம் பார்க்க முடியும்.

1950கள் மற்றும் 1960களில், இலங்கை முஸ்லிம் சமூகம் பெயரளவிலான தேசியவாதம் என்ற அரசியல் செல்நெறியை பின்பற்றியது. 

1970கள் மற்றும் 1980களில், இலங்கை முஸ்லிம் சமூகமானது சமூக-செயலாளத்துவ அரசியல் செல்நெறியை நோக்கி நகர்ந்தது.

1990களில், இலங்கை முஸ்லிம் சமூகம் பெயரளவிலான தேசியவாதம் மற்றும் சமூக-செயலாளத்துவம் ஆகிய இரண்டு அரசியல் செல்நெறிகளையும் கலப்பு முறையில் பின்பற்றியது.

#மாற்றத்திற்கு_செல்வாக்கு_செலுத்தும்_முக்கிய_காரணிகள்.

1. சமூக நிலை: 
இஸ்லாம் மார்க்கரீதியில் சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு இடங்கொடுக்கவில்லை. இருப்பினும் இலங்கை முஸ்லிம்கள் பல்லின சமூக கட்டமைப்போடு ஒன்றித்து வாழும்  சூழ்நிலையில் ஏனைய சமூகங்களில் காணப்படும் சமூக ஏற்றத்தாழ்வு குறித்த சில நடைமுறை முஸ்லிம்கள் மத்தியிலும் பிரதிபலிக்கிறது.

அந்த வகையில் இலங்கையில் முஸ்லிம்களின் சமூக நிலையானது  குறைந்த சமூக அந்தஸ்து கொண்ட முஸ்லிம்கள் பெரும்பாலும் சமூக மாற்றத்தைக் கோரும் அரசியல் கட்சிகளை ஆதரிக்கின்றனர். 

2.மத அடையாளம்: 
இலங்கை முஸ்லிம் சமூகமானது ஏனைய உலக முஸ்லிம்களை மற்றும் இலங்கைச்சூழலில் காணப்படும் பிற மத  பிரிவினரை விடவும் தனித்துவமான மத அடையாளங்கள் மற்றும் பெருமானங்களை கொண்டுள்ளனர்.

இந்த அடையாளத்தைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கு இலங்கை முஸ்லிம்கள் அரசியல் ரீதியாக செயல்பட வேண்டும் என்ற கட்டாய் உள்ளது.

3. மத கொள்கை அடிப்படையிலான வேறுபாடுகள்:
 இலங்கை முஸ்லிம் சமூகம் மத கொள்கை அடிப்படையிலான சில வேறுபாடுகளுக்கு உள்ளாகியுளனர்.

அதனடிப்படையில் சுன்னி, ஷியா, மலே, போரா  மற்றும் தெளஹித் உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கவை.

இந்த வேறுபாடுகளின் அடிப்படைகளும் சமூகத்தின் அரசியல் செல்நெறியில் பிரதிபலிக்கின்றன.

4.சர்வதேச அழுத்தம்: 
இலங்கை முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளைப் பாதுகாக்க தேவை ஏற்படும்போதெல்லாம் சர்வதேச இஸ்லாமிய சமூகம் அழுத்தங்களை ஆட்சியாளர்கள் மீது பிரயோகிக்கின்றது.
 
அப்படியான அழுத்தங்களின் காரணமாக, இலங்கை அரசாங்கம் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் நலன்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது. இப்படியான சூழ்நிலையும் அரசியல் செல்நெறியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

5.இன மற்றும் அரசியல் மோதல்கள்: 
இலங்கையின் வரலாற்றில் இடம்பெற்றுள்ள பல்வேறு இன மற்றும் அரசியல் ரீதியாக ஏற்பட்ட கலவரங்கள், பதற்ற நிலைமைகள் மற்றும் உள்நாட்டு யுத்தம் போன்றவை  முஸ்லிம் சமூகத்தையும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதித்துள்ளன.

அத்தகைய சூழல் சமூகத்தின் அரசியல் செல்நெறியில் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றன.

6. பொருளாதார நிலை: 
இலங்கையில் முஸ்லிம்களின் பொருளாதார நிலையானது பணக்கார தொழில் முனைவோர்கள் தொடக்கம் ஏழை விவசாயிகள் வரை பொருளாதார ரீதியாக ஏற்ற தாழ்வுகளைக் கொண்ட சமூகமாக காணப்படுகிறது.

அதனடிப்படையில் அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் அரசினதும்   அரசியல் கட்சிகளின் ஆதரவை நாடுகின்றனர். 

பணம் படைத்தவர்கள் அவர்களது சொத்துக்கள் மற்றும் தொழில் முயற்சிகளை பாதுகாக்கவும், வளர்த்துக்கொள்ளவும் வாய்ப்பான அரசியல் தரப்பினரை நாடுகின்றன. 

ஏழை மக்கள் அரசினால் கிடைக்கும் நிவாரணங்கள், மானியங்கள் மற்றும் உதவித்திட்டங்கள் உள்ளிட்ட வாழ்வாதார திட்டங்களை பெருமளவு எதிர்பார்த்து அதிகாரமிக்க கட்சிகளின் பக்கம் சாய்கின்றனர்.

அந்தவகையில பொருளாதார நிலையும் சமூக அரசியல் செல்நெறியில் தாக்கம் செலுத்துகிறது.

7.அரசியல் கட்சிகளின் செல்வாக்கு:
இலங்கை முஸ்லிம் சமூக அரசியல் செல்நெறியானது சமூக மற்றும் தேசிய அரசியல் கட்சிகளின் செல்வாக்கினால் பெருமளவு தாக்கத்துக்குள்ளாகிறது . 

அந்த வகையில் முஸ்லிம் சமூகம் சார் அரசியல் கட்சிகளான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்,  ஸ்ரீலங்கா  முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தேசிய காங்கிரஸ் உள்ளிட்ட  கட்சிகள் சமூகத்தில் குறிப்பிடத்தக்க செல்வாக்கைக் கொண்டுள்ளன. 

இந்த கட்சிகள் சமூகத்தின் அரசியல் செல்நெறியை வடிவமைக்க உதவுகின்றன.
அதுமட்டுமன்றி பெருந் தேசிய கட்சிகள் மற்றும் ஏனைய சமூக அரசியல் கட்சிகளின் செல்வாக்கும் முஸ்லிம் அரசியல் செல்நெறியில் பெருமளவு தாக்கத்தைச் செலுத்துகிறது.

அதற்கு ஒருபடி மேலாக கொள்கையற்ற அல்லது வாக்குமாறும் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் முஸ்லிம்  சமூக அரசியல் செல்நெறியில் விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்துகின்றனர். அப்படியான பிரதிநிதிகள் பெரும்பாலும் தங்கள் சொந்த நலன்களையும் இலக்குகளையும் முதன்மைப் படுத்துகின்றமையால் பொதுவான சமூக நோக்கம் பல்வேறு சந்தர்ப்பங்களில் பிழைத்துவிடுவதுமுண்டு.

#சமீபத்திய_போக்கு.

ஒட்டுமொத்தமாக இலங்கை முஸ்லிம் சமூகத்தின் அரசியல் செல்நெறி தொடர்ந்து பல்வேறு காரணிகளின் தாக்கத்துடன் தளம்பல் நிலையில் மாற்றம் கண்டு வருகின்றமையை அவதானிக்க முடிகிறது.

 சமீபத்திய ஆண்டுகளில், சமூகம் அதிக சுதந்திரமான அரசியல் செல்நெறியை மேற்கொண்டு வருகிறது. இது சமூகத்தின் பல்வேறு பிரிவுகளுக்கு இடையே அதிக ஒருங்கிணைப்புக்கு வழிவகுத்துள்ளது.

#எதிர்கால_நிலமைகள்.

இலங்கை முஸ்லிம் சமூகத்தின் அரசியல் செல்நெறி எதிர்காலத்தில் எவ்வாறு இருக்கும் என்பது நிச்சயமற்ற ஒன்றாக இருக்கிறது.

இருப்பினும், 

இலங்கை முஸ்லிம் சமூகமானது சமூக, பொருளாதார ரீதியாக முன்னேற்றவும் மத அடையாளங்கள் மற்றும் பெருமானங்களை பாதுகாக்கவும், சமூகத்தின் இருப்பை உறுதிசெய்யவும் அரசியல் ரீதியாக செயல்பட பூகோள, பிராந்திய மற்றும் தேசிய அரசியல், பொருளாதார மற்றும் சமூக மாற்றங்களை உள்வாங்கி செயற்படவேண்டிய அவசியம் காலத்தின் கட்டாயமாகும்.

No comments:

Post a Comment